Monday, August 6, 2012

நாளையும், நீ வருவாயா?

அதிகாலை 3 மணிக்கு தொடங்கினேன்..இரண்டு மணி நேர தொடர் ஓட்டத்திற்கு பிறகு மெத்தையில் சாய்கிறேன்..!  இது நான் உடல் இளைப்பதற்காக ஓடிய ஓட்டம் அல்ல..! என் மனம் இளைப்பாற ஓடிய ஓட்டம்..! என்னிடம் இருந்தே, என் மூளையிடம் இருந்தே எனக்கு ஒரு இடைவேளை வேண்டி இருந்ததால்.. ஓடிய ஓட்டம்..! 


இது தான் நான் அதிகாலையில் ஓடும் முதல் ஓட்டம்..!  தொடர்ந்து ஓடினேன்.! 

என்னுடன் யாரும் அந்த தெருவில் இருக்கிறார்களா என்று பார்த்தேன்..! யாரும் இல்லை. அது ஒரு அமைதியான ஓட்டமாக இருக்கவேண்டும் என்பதாலும்.. என் மனம் நிலையாய் இருக்கவேண்டும் என்பதாலும் எந்த இசை உபகரணங்களும் நான் உபயோகப்படுத்தவில்லை.

ஓடும்போது, எனக்கு முன்னால் இரண்டு கண்கள் மட்டும் என்னை பார்த்துக்கொண்டே இருப்பது போல் இருந்தது. அதெப்படி..! வெறும் கண்கள் மட்டும்?? என யோசித்தேன். ஆனால் இந்த பார்வை எனக்கு பரிச்சயமானது போலவே இருந்தது! அந்த கண்கள் மிக பெரியதாக, அழகானதாகவும் இருந்தன. இன்னும் இருள் நீங்காத அந்த மரங்கள் அடர்ந்த சாலையிலும், மின்சார விளக்கின் வெளிச்சம் குறைவாக இருக்கும் குறையை நீக்கிட நிலவினை கோலி குண்டு அளவிலாக இரு துண்டுகளாக்கி தேனில் ஊறவைத்து எனக்கு முன் யாரோ எடுத்து செல்வதைப்போல் இருந்தன அந்த கண்கள். வெகு சீராக மின்னல்கீற்று போல செதுக்கிய புருவம்.. அதனால் தானோ என்னவோ! மின்சாரம் போல ஏதோ ஒன்று என்னுள் ஊடுருவிசெல்வதை என்னால் உணரமுடிந்தது..! அந்த பார்வை ஒரே சீராய்..என் முன்னால் இருந்து பின்னும், வலமிருந்து இடமும், இடமிருந்து வலம் என மாறி மாறி என்னை கடந்து செல்வதை காணமுடிந்தது. 

அந்த பார்வை, அழகாக இருந்தாலும், வசியம் செய்யும் விதமிருந்தாலும், "என் பின்னால் தொடர்ந்து வராதே" என்று எச்சரிப்பது போல இருந்தது. ஆனால், என் தேடல் தொடங்கியதை நான் அப்போது அறிந்திருக்கவில்லை.

ஓடிய களைப்பில் மூச்சிரைக்க, ஒருகணம் நின்றேன்..! என்னுடன் ஓடிவந்த களைப்பில்லாமல்..மாறாக களிப்போடும் கனிவோடும் தோன்றியது அந்த பார்வை.

"யார் நீ ?" என்று கேட்டேன்.

"கண்கள் என்றாவது பேசி இருக்கிறதா?" என்று கேட்பது போல் பார்த்தது அந்த கண்கள்.

"உன் கண்கள் பேசுவதை நீயே அறியவில்லையா! ஆச்சர்யம் தான்..!" என்று சொன்னேன்.

"ஏளனம் வேண்டாம். திரும்பி செல். நீ வெகு தூரம் எனை பின் தொடர்ந்து வந்து விட்டாய். என்னை பின் தொடர்ந்தால் நீ வழி தொலைப்பாய். ஆகவே திரும்பி செல்" - இப்படி பேச எண்ணியதோ என்னவோ! எனக்கு அப்படி தான் தோன்றியது அந்த கண்களை பார்க்கும் போது.

"ஏன்..! உன்னுடன் ஓடுகையில் எனக்கு தூரம் தெரியவில்லை.மாறாக, மேலும் ஓட தோன்றுகிறது. நீயும் என்னுடன் திரும்பி வா. இவ்வளவு பிரகாசமான, அமைதியான, ஆறுதலான கண்களை நான் பார்த்தது இல்லை" - என்று கூறினேன்.

"உன் கண்களை நீ பார்த்தது உண்டா? - என பதிலுக்கு கேள்வியை எழுப்பியது அந்த கண்கள்.

"பார்த்திருக்கிறேன். அவைகளுக்கென்ன?" என்று கேட்டேன்.

"உன் கண்கள்.. எதையோ தொலைத்துவிட்ட உணர்வை கொடுக்கின்றன. ஏனோ ஒருவித தவிப்பும் தேடலும் இருப்பதை உணர்கிறேன். அவற்றில்   வலியினையும், கேள்விகளையும், சிறு பயமும், மகிழ்ச்சியும், இழையூடுவதை காண முடிகிறது." - என்றது.
"என் கண்களில் உன்னால் இவ்வளவு காணமுடிகிறதா? என்ன சொல்கிறாய். வேறேதும் தெரியவில்லையா?" - நான் கேட்டேன்.

" ஆமாம்! அவை எல்லாம் என்னால் காணமுடிகின்றது. இவற்றுடன் மெல்லிய காதலும் தென்படுகிறது " - அந்த கண்கள் பதிலளித்தது.

"என் கண்களில் இருக்கும் இத்துனையும் ஒருசேர இதுவரை நான் அறிந்ததில்லை..! ஆனால் இன்று என்னால் முடிகின்றது. நீ என்னுடன் வந்துவிடு."- என்றேன் நான்.

"நான் யாருடைய கண்கள், இதுவரை யாருக்காக அழுதிருந்தேன் என்றும் உனக்கு தெரியாது. இன்று உன்னுடன் வந்துவிட்டால், என்னுடன் சேர்ந்து உன்னிரு கண்களும் கலங்குவதை நான் காண தயாரில்லை. இந்த விழிகள் உன் முகத்திற்கு பொருந்தாது. ஆகையால், உன்னுடன் வர இயலாது." - அந்த கண்கள் பேசியது.

"நீ சொல்வது நியாயம் தான்! திடீரென வந்து "வா என்னுடன்" என்று சொன்னால், எப்படி வருவாய். அது சரி. நாளை வருகிறேன். நாளை மறுநாள் வருகிறேன். நாளை முதல் தினமும் வருகிறேன். ஆனால், உனக்கு தெரியுமா? நீ சொல்வது போல் உன் கண்கள் அழுவதற்கான கண்கள் அல்ல. அவை அமுதத்தில் தோய்த்தெடுத்தவை. அவற்றிற்கு ஆனந்தத்தை கொடுப்பது என் பொறுப்பு. வந்துவிடு என்னுடன்." - என்றேன்.

"பித்தன் போல பிதற்றாதே! வேண்டுமானால், நான் உனக்கு வேறு அழகானதொரு கண்களை கண்டுபிடிக்க உதவுகிறேன். சரியா?" - புரியாமல் பேசியது அந்த கண்கள்.

"பித்து பிடித்தவன் பித்தன் தானே..? பித்தம் தெளிய ஒருவனுக்கு தேவை மருந்து தான். மாற்று மூளையில்லை. நான் உன்னிடம் உன்னை கேட்பது மருந்தாக தான். ஆனால் நீ எனக்கு சொல்வது "மாற்று மூளையை" பற்றி." - பிடிவாதம் பிடித்தேன்.

"என் கண்கள் பொருத்தப்பட்டால்..நீயும் அழுவாய். என்கிறேன் நான்..இது ஏன் உனக்கு புரியவில்லை?" - கோபமாய் கேட்டது கண்கள். அந்த கோபத்தின் உச்சம் அந்த நிலவு போன்ற கண்களை செவ்வாய் கிரகம் போல சிவக்க செய்தது.

"என்னுள் பொருத்தப்பட்ட உன்னால் நான் அழுவேனாயின், அதை துடைபதற்கு இரண்டு கைகளும், மேலும் அழாமல் தடுப்பதற்கு ஒரு இதயமும் இருக்கிறது. அதை வேண்டுமாயின் உனக்கே தருகிறேன்." - என்றேன்.

"உனக்கு புரியவைக்க முடியாது. நான் வருகிறேன்." என்று திரும்பி செல்ல எத்தனித்த அந்த கண்களிடம் இப்படி கேட்டேன் "கொஞ்சம் நில்! நாளையும், நீ வருவாயா? என்னை இன்று பார்த்தது போல பார்ப்பாயா?"

பதில் சொல்லாமல் அமைதியாய் எனை பார்த்த அந்த கண்கள் பதிலேதும் சொல்லாமல் மறைந்துபோனது. 

அந்த கண்கள் எனை பார்த்த அந்த பார்வையில் ஆயிரம் அர்த்தங்கள் இருந்தாலும், நான் தேடும் பதிலும் ஒளிந்திருப்பதை நான் காண தவறவில்லை. ஏனோ, எதற்கோ பயத்துடன் பிரயானிக்கும் அந்த கண்கள் இருட்டோடு இருட்டாகவே உலாவர நான் விரும்பவில்லை..! காதல், மகிழ்ச்சி, கனவு, உற்சாகம் என எல்லாவற்றையும் நான் தர தயாராயிருக்கிறேன் பதிலுக்கு அந்த கண்கள் எனக்கு கண்ணீரை பரிசளித்தாலும் பரவாயில்லை. நாளை மட்டும் அல்ல, என்றாவது ஒருநாள் அந்த கண்கள் எனை மீண்டும் தேடிடும் அது வரை என் ஓட்டம் தொடரும் என வீடு வந்து சேர்ந்தேன். 

என் தேடல் தொடர்வதை நான் உணர்கிறேன்..! ஆனால் இம்முறை என் தேடலுக்கான பொருள் அறிந்து கொண்டேன்.

No comments:

Post a Comment